ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது


நம் கலாசாரம், நம் பாரம்பரியம். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது என்று நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். 

நடிகர் சிம்பு வலியுறுத்தல் 
நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து வருமாறு:– ‘‘ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர். 

அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வது தான் முக்கிய கடமை என்று மல்லுக்கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. 

கடைநிலை தூதுவன் 
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்சநீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாசாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாசாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்.டி.ஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக்கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.

ஓயக்கூடாது 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய–மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப்பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாசார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.’’ இவ்வாறு அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
Published in DAILY THANTHI Tamil News Paper Dated 31-12-16

0 Comments:


 

CONTACT ADMIN : teamstrofficial@gmail.com